Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

30 ஆம்புலன்ஸ்... ஒரு குழந்தையின் உயிர்மீட்க நடந்த ஒரு திக் திக் சேசிங்!

Published on Thursday, November 1, 2018 | November 01, 2018


மிரண்ட திருச்சி - சென்னை பைபாஸ்... ஒரு குழந்தையின் உயிரை மீட்க 30 ஆம்புலன்ஸ்கள் நடத்திய சக்சஸ் ஆபரேஷன்!



திருச்சி டு சென்னை... 30 ஆம்புலன்ஸ்... ஒரு குழந்தையின் உயிர்மீட்க நடந்த ஒரு திக் திக் சேசிங்!



சனிக்கிழமை இரவு 8.00 மணி

திருச்சி, கிருஷ்ணா மருத்துவமனை. பிரசவத்துக்காகச் சேர்க்கப்படுகிறார் கிருஷ்ணவேணி. இவரது கணவர் பெயர் குணாளன். முதல் குழந்தை... இருவரும் பல கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ்





ஞாயிறு காலை 6:30 மணி. 

சிசேரியன் மூலம் கிருஷ்ணவேணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்த இரண்டு மணி நேரத்தில் குழந்தை  மூச்சு விடச் சிரமப்படுவதை  அறிந்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையை மட்டும் திருச்சியுள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

காலை 9 மணி. 

தனியார் மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ' உயர் சிகிச்சை வழங்க வேண்டும்... உடனடியாக சென்னைக்கு கொண்டு செல்லுங்கள்' என ஒரு மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறார்கள். 'தாமதப்படுத்தாமல் உடனடியாகக் கொண்டு சென்றால் குழந்தையை காப்பாற்றிவிடலாம்' என குணாளனிடம் தெரிவிக்கிறார்கள்.  குழந்தை வெண்டிலேட்டரில் வைத்துத் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. குழந்தையை, வேறு மருத்துவமனைக்கு மாற்றிய தகவல் கிருஷ்ணவேணிக்குத் தெரியாது.
சென்னைக்குக் குழந்தையை கொண்டு செல்ல அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வேண்டுமென மருத்துவமனை பரிந்துரைக்கிறது. கண்டிப்பாக, வெண்டிலேட்டர் இருக்கிற ஆம்புலன்ஸ் வேண்டும். 'கால் ஈஸி' என்கிற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதில் இலியாஸ் என்பவரின் தொடர்பு கிடைக்கிறது. இவர், மாநில ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணை செயலாளர்.  "பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை... ஆம்புலன்ஸில் 330 கிலோ மீட்டர்கள் கொண்டு செல்வது ஆபத்து... 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணிக்கிற ஆம்புலன்ஸ் குழிகளில் விழுந்து எழுகிறநேரத்தில் வெண்டிலேட்டரில் பொருத்தியிருக்கிற பைப், குழந்தையைக் காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது... குழந்தையின் வசதிற்கேற்ப ஆம்புலன்ஸை தயார்படுத்த வேண்டும்" என்று கூறிய இலியாஸ் மளமளவென்று செயலில் இறங்கியிருக்கிறார்.

மதியம் 2 மணி.

அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகள்  ஆம்புலன்ஸ், மணப்பாறை பகுதியில் ஸ்ரீதரன் என்பவரிடம் இருக்கிற தகவல் கிடைக்க, அவரைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். ஸ்ரீதரன் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசர சிகிச்சை அளிக்கும் டெக்னீஷியனாகவும் பணி புரிகிறார்.  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டாரை அழைத்துக் கொண்டு ஸ்ரீதரன் 2:30 மணிக்கு மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு கிளம்புகிறார். மருத்துவமனையில் குழந்தையைச் சென்னைக்குக் கொண்டுசெல்ல  ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன.

பிற்பகல் 3 மணி.

ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிட்டது. "எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகத்தில் செல்லுங்கள்"  என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டரிடம் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.  330 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்தச் சாலையில் அதிகபட்ச வேகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதே 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகம்தான். பல இடங்களில் சாலைசந்திப்புகள் வேறு இருக்கின்றன. 7 சுங்கச் சாவடிகளும் உண்டு. 4 மணி தொடங்கி இரவு பத்து மணி வரை, சாலைகளின் 'ப்ரைம் டைம்'. இந்தச் சூழலில், நான்கு மணி நேரத்தில் சென்னையை அடைவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம். அதிலும், இரவு 7 மணிக்குமேல், செங்கல்பட்டில் இருந்து அண்ணா சாலையில் இருக்கிற மருத்துவமனையை அடைய மட்டுமே குறைந்தபட்சம் 2 மணி நேரமாகும்.

ஆம்புலன்ஸ் கிளம்ப இருந்த ஒரு மணி நேர இடைவெளியில் இலியாஸ்,  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருக்கிற மூன்று வாட்சப் குரூப்களில் குழந்தை குறித்த  தகவலைப் பகிர்ந்துகொள்கிறார். படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பலரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக இருப்பதால் எல்லாத் தகவல்களும் ஆடியோ வடிவில் குரூப்பில் பதியப்படுகிறது. மூன்று மணியில் இருந்தே  வாட்ஸ்ஆப்பை வாக்கிடாக்கியாக மாற்றுகிறார்கள். திருச்சியில் இருந்து சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிற எல்லா ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைகிறார்கள். திருச்சி முதல் சென்னை வரை இருக்கிற பகுதியை பல எல்லைகளாகப் பிரிகிறார்கள். ஒவ்வொரு எல்லைக்கும் ஒரு குழு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

ஆம்புலன்ஸ்

4 :மணி

குழந்தை ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறது. ஆம்புலன்ஸின் உள்ளே குணாளனின் உறவினரும் ஸ்ரீதரனும் மட்டும் இருக்கிறார்கள். வெண்டிலெட்டரில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது.  ஓட்டுநருக்கு அருகில் குழந்தையின் தந்தை குணாளன் அமர்ந்திருக்கிறார். சரியாக 4:10 மணிக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறது. குழந்தை உள்ள ஆம்புலன்ஸ்க்கு முன்னால் நான்கு ஆம்புலன்ஸ்கள் சாலையை கிளீயர் செய்து கொடுத்துக்கொண்டே செல்கின்றன. எல்லா ஆம்புலன்ஸ்களிலும் ஒலிபெருக்கி இருப்பதால் வாகனங்களை ஒழுங்குபடுத்த அவை  உதவியாக இருக்கின்றன.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டர் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இயக்குகிறார். வாகனம் குலுங்காமல் லாகவமாக ஓட்டுகிறார். ஓட்டுநருக்கு அருகில் குழந்தையின் தந்தை பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறார். குழந்தை இருந்த ஆம்புலன்ஸ்க்கு முன்னால் வந்த 4 ஆம்புலன்ஸ்கள் திருச்சி, நம்பர் ஒன் சுங்கச்சாவடியோடு நின்றுவிட, தொழுதூர் பகுதியைச் சேர்ந்த 2 ஆம்புலன்ஸ்கள் இணைகின்றன.  அவர்கள் முன்னால் சென்று சாலையை ஒழுங்குபடுத்துகிறார்கள்.

வாட்ஸ்ஆப்பில் வாகனம் எங்கிருக்கிறது என்கிற தகவல் நிமிடத்துக்கு ஒருமுறை ஆடியோ செய்திகளாக வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. ஏதோ முக்கியத்துவம் வாய்ந்த செயல் நடக்கிறது என்று புரிந்துகொண்டு சாலையில் சென்ற எல்லா வாகனங்களும் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்க ஆரம்பித்தன.

இதற்கிடையில், திருச்சி மருத்துவமனையில் கிருஷ்ணவேணி கண் விழித்து விட்டார். குழந்தை அருகில் இல்லாததைக் கண்டு பரிதவித்து குணாளனுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார்.  “இன்னொரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை இருக்கிறது... பயப்படாதே... ஏதும் ஆகாது” எனக் குணாளன் மனைவியை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார். குழந்தை பிறந்ததில் இருந்தே மயக்கத்தில் இருந்த அவரது மனைவி, இன்னும் குழந்தையைப் பார்க்கவே இல்லை. என்ன நடக்கிறது என்றே புரியாமல் மிகவும் தவிப்போடு இருந்தார் கிருஷ்ணவேணி.

இதே நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி 2 ஆம்புலன்ஸ்கள் கிளம்புகின்றன. தொழுதூரில் இருந்துவந்த 2 ஆம்புலன்ஸ்களும் அந்த ஊரோடு நின்றுவிட, விழுப்புரத்தில் இருந்து சென்ற  ஆம்புலன்ஸ்கள் தொழுதூரில் இருந்து பொறுப்பெடுத்துக் கொள்கின்றன. எந்தச் சிரமமுமின்றி ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையை வந்தடைகிறது. விழுப்புரத்தில் தயாராய் இருந்த மேலும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் பணியில் இணைந்து கொள்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில், ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் நின்று சாலையை சரிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. விழுப்புரத்தைச் சேர்ந்த 7 ஆம்புலன்ஸ்களும் திண்டிவனம் வரை கொண்டு வந்துவிடுகின்றன. அதற்குள் செங்கல்பட்டைச் சேர்ந்த 3 ஆம்புலன்ஸ்கள் திண்டிவனம் வந்துவிடுகின்றன. திண்டிவனத்தில் இருந்து அவர்கள் ஆம்புலன்ஸை பொறுப்பெடுத்து முன்சென்று வழியமைத்துத் தருகிறார்கள். எந்த இடையூறுமின்றி ஆம்புலன்ஸ் திண்டிவனத்தைக் கடக்கிறது. செங்கல்பட்டை வந்தடையும்போது வேறு நான்கு ஆம்புலன்ஸ்கள் அவர்களோடு சேர்ந்து கொள்கின்றன.

இரவு 7 மணி

இனிதான் சிக்கல் ஆரம்பம். சென்னையை நெருங்க நெருங்க வாகன நெரிசல் அதிகமாகிறது. கூடுவாஞ்சேரியில் மேலும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் சேர்ந்து சாலையை முடிந்தவரை ஒழுங்குபடுத்துகின்றன. 'குழந்தையைச் சுமந்துவரும் ஆம்புலன்ஸ் எந்தக்காரணத்துக்காகவும் நின்று விடக்கூடாது' என்கிற தகவல் வாட்ஸ்ஆப்பில் வந்து கொண்டே இருந்ததால் சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஆங்காங்கே தன்முனைப்பாக நின்று சாலையைச் சீர்ப்படுத்துகிறார்கள். வரிசையாக பத்து ஆம்புலன்ஸ்களும் ஒலி எழுப்பியபடி கடந்துசெல்லும் சத்தம் வாகன ஓட்டிகளை பதற்றத்துக்குள்ளாக்கியது. ஆனாலும், ஏதோ அவசரச் சூழல் என்று உணர்ந்து எல்லோரும்  ஒதுங்கிநின்று ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுகிறார்கள்.

டிரைவர் அலெக்ஸ்சாண்டர்


மணி 8 :20

சென்னை நகருக்குள் நான்கு கிலோ மீட்டருக்கு ஓர் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி என மொத்தம் 15 ஆம்புலன்ஸ்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க சரியாக 8:20-க்கு அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வந்து நிற்கிறது குழந்தையை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ். சரியாக 4 மணி, 10 நிமிடங்கள்... குழந்தையின் அப்பா குணாளன் கண்ணீர் மல்க ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்கிறார். மிகப் பெரிய பொறுப்பை முடித்த மகிழ்ச்சியில் அலெக்ஸ்சாண்டரும் ஸ்ரீதரனும் நிம்மதி பெரு மூச்சு விடுகிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை' எனவும்,  'நுரையீரல் பகுதியில் பிரச்சனை இருப்பதாகவும்' தெரிவித்தார்கள். 'சிகிச்சையளிக்க பல லட்சங்கள் செலவாகும்' என்றதால், இரண்டு மணி அடிப்படைச் சிகிச்சைகளுக்குப் பிறகு இரவு 10 மணிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்படுகிறது. அங்கு வென்டிலேட்டரில் வைத்து குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved